Thursday, February 10, 2011

யுத்தம் செய்



அப்பாவிகளை பலிகடா ஆக்கும் கும்பலை ஒரு சாமான்யன் எப்படி எதிர்த்து யுத்தம் செய்கிறான் என்பதுதான் கதை யுத்தம் செய்.

சென்னையில் ஒரு முக்கிய சரகத்தில் தொடர்ந்து மனித கைகள், ஒரு அட்டைப்பெட்டியில் போடப்பட்டிருக்க, ஏற்கனவே தொலைந்து போன தன் தங்கையை கண்டுபிடிக்க முடியாமல் விரக்தியின் உச்சத்திலிருக்கும் ஜே.கே எனும் சிபிசிஐடி ஆபீஸரான சேரனிடம் இந்த கேஸ் கொடுக்கப்படுகிறது ஒரு வாய்ப்புடன். இந்த கேஸை கண்டுபிடித்தால் அவரது தங்கையின் கேஸை மீண்டும் ஓப்பன் செய்து விசாரிக்க அனுமதி தருவதாய் சொல்கிறார் சிபிசிஐடி டிஎஸ்பி. கொஞ்சம் கொஞ்சமாய் கிடைத்த கைகளை வைத்து தன் விசாரணையை ஆரம்பிக்க, அங்கொன்றும், இங்கொன்றுமாய் லிங்க் கிடைத்து, ஒரு வட்டம் வருகிறது. கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்யப்படுகிறார்கள்? கொலை செய்யப்படும் ஆட்களின் பின்னணி என்ன என்பது விறுவிறுக்க வைக்கும் இறுதிகாட்சி.

காதல் கதையை எந்த அளவு அழகியல் ரசனையோடு சொல்ல முடியுமோ அதே மாதிரி ஒரு க்ரைம் இன்வெஸ்டிகேஷன் ஸ்டோரியையும் மென்மையாக சொன்னதற்காகவே இயக்குநர் மிஷ்கின் பாரட்டுக்குரியவர் ஆகிறார். கிடைத்த இடங்களில் மட்டுமே பின்னணி இசை.. அந்த இசையிலும் ஓட வைப்பவை.. மனதை லயிக்க வைப்பவை.. அழுக வைப்பவை என்று வெரைட்டியாக வயலினும், பியானோவும் கலந்து கட்டி அடித்து கதைக்குள் நம்மை தள்ளி விடுகின்றன.

சாஃப்ட் ஹீரோ என பெயர் எடுத்த யதார்த்த நாயகன் சேரன் இந்த படத்தில் அண்டர் ப்ளே ஆக்டிங்கின் எல்லை வரை சென்று அடக்கி வாசித்திருக்கிறார். சேரன் இதுவரையில் நடித்த படங்களிலேயே சிறந்த படம் இது. அவர் தனது படங்களை விட்டுக் கொடுக்க முடியாமல் இல்லை என்று கூறினாலும் இதுதான் உண்மை. அவர் தானே நடித்து தன்னை இயக்கிய திரைப்படங்களில் காட்டியது தமிழ் சினிமாவின் ரசிகனை சமாதானப்படுத்த அவர் செய்து கொண்ட சமரசமான ஒரு நடுத்தர வர்க்க அடையாளம்தான் தெரிந்திருந்தது. ஆனால் இதில் வெறும் சேரன் மட்டுமே.

ஒய். ஜி. மகேந்திரனுக்கு வித்தியாசமான ரோல். கேரக்டருக்காக மொட்டை அடிச்சு நல்லா நடிச்சிருக்கார். டிஎஸ்பி நரேன், அசோக்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர், அஸிஸ்டெண்ட் கமிஷனர் திரிசங்கு, ஜவுளிக்கடை அதிபர், அடிக்கடி ஆங்கிலம் பேசும் கமிஷனர், காணாமல் போன ஒருவனது செம குண்டு அம்மா, ஜெயப்பிரகாஷ், மார்சுவரி ஆள், அந்த பையன் என்று சரியான ஆட்களை பொறுக்கி போட்டிருக்கிறார் இயக்குநர். சேரனின் உதவியாளராய் வரும் தீபா ஷாவும் இன்னொரு இளைஞரை பற்றி பெரிதாய் சொல்ல முடியவில்லை. குறிப்பிட்டு சொல்லக்கூடிய நடிப்பு லஷ்மி ராமகிருஷ்ணனுடயது. சும்மா மிரட்டியிருக்கிறார்.

ஹீரோ இருக்கிறார். ஹீரோயின் இல்லை. காமெடியன் இல்லை.. ஆனால் வில்லன்களுக்கு பஞ்சமில்லை. இதில் யார் நிஜ வில்லன்..? யார் நிஜமில்லாத வில்லன் என்பதை படத்தின் முக்கால் பாகம் வரையிலும் சஸ்பென்ஸாகவே கொண்டு போயிருப்பதுதான் படத்தின் பலமே. போஸ்ட்மார்ட்டம் அறையை இவ்வளவு துல்லியமாக அலசியது இந்தத் தமிழ்ப் படமாகத்தான் இருக்கும். ஜெயப்பிரகாஷின் அந்த வேடம், இறுதியில் பேசப்படப் போகிறது என்பதை முதலில் யூகிக்கவே முடியவில்லை.

கைகள் துண்டாக்கப்படுவது. டிரில்லிங் மிஷினில் துளையிடுவது, விதவிதமாக கத்திகளைக் காண்பிப்பது என்று அடிவயிற்றில் சிலீர் உணர்வைத் தூண்டுகிறது. 'ஏ' சர்டிபிகேட் கொடுத்தது சரியானதுதான். அதே சமயம் மனசாட்சிப்படி 'ஏ' சர்டிபிகேட்டை நீக்க சமரசம் செய்து கொள்ளாமல் அதனைப் பெற்றுக் கொண்டு வெளியிட்டிருக்கும் மிஷ்கினையும், தயாரிப்பாளரையும் பாராட்டலாம்.

சிறிய குழந்தைகள் நிச்சயமாக இதனைப் பார்க்கக் கூடாது. மிகவும் டிஸ்டர்பன்ஸாக இருக்கும். பல காட்சிகள் பெரியவர்களையே பயமுறுத்துகின்றன. ஒய்.ஜி.எம்.மின் மகன் ரோட்டோரமாக அமர்ந்திருக்கும் காட்சி, மனைவி நிற்கின்ற காட்சி, கார் அசுர வேகத்தில் வந்து மோதுவது, இறுதிக் காட்சியில் கடத்தப்பட்டவர்களைக் காட்டுவது.. என்று தொழில் நுட்பத்தில் குறை சொல்ல முடியாத அளவுக்கு பயம் காட்டுதல் தொடர்ந்திருக்கிறது.

இரவு நேரக் காட்சிகளின் படிமத்தை நிழல் பிடித்தாற்போன்று காட்டியிருப்பதும், கேமிரா எங்கு திரும்பினாலும் ஆள் நடமாட்டம் அதிகமில்லாத சூழல்களும், இருப்பிடத்தை இப்படியும் காட்ட முடியுமா என்று யோசிக்க வைக்கும் கோணங்களுமாக புதிய ஒளிப்பதிவாளர் சத்யாவின் பங்களிப்பு இத்திரைப்படத்திற்கு இன்னொரு பலம்.

ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படத்துக்கு காதல், டூயட், காமெடி எல்லாமே அநாவசியமே என்பதை உணர்ந்து கலக்கலாய் திரைக்கதை அமைத்தது. பல சந்தர்ப்பங்களில் ஃபைட் சீன் வைக்கும் வாய்ப்பு இருந்தும் அவற்றை தவிர்த்து விட்டு ஒரே ஒரு சீனில் மட்டும் ஃபைட் வைத்தது என்று பல இடங்களில் இயக்குநர் சபாஷ் வாங்குகிறார்.

படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. சேரன் பணியாற்றுவது சிபிசிஐடி பிரிவு என்று சொல்கிறார்கள். இந்தப் பிரிவில் பணியாற்றும், கான்ஸ்டபிள்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்கள், கண்காணிப்பாளர்கள் சீருடை அணிந்துதான் பணியாற்ற வேண்டும் என்பதில்லை. பெரும்பாலும் மப்டியில்தான் இருப்பார்கள்.

ஆனால் இவர்களுக்கான அதிகார அத்தாரிட்டி தனி டி.ஜி.பி. தலைமையில் இயங்குகிறது.. தனி ஹெட்குவார்ட்டர்சும் இருக்கிறது. அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தனிப் பிரிவு அலுவலகங்கள் இருக்கின்றன. ஆனால் இவர்கள் அந்தந்த மாநகர காவல்துறை ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் வர மாட்டார்கள். சி.பி.சி.ஐ.டி.யின் மாநிலத் தலைமைக்கு மட்டுமே கட்டுப்படக் கூடியவர்கள்.

திருவல்லிக்கேணி தெருவில் சேரனும், அவரது குழுவினரும் ஓடுகின்ற காட்சியிலும், இன்ஸ்பெக்டரை தூக்க வந்த குவாலிஸ் காரை சேரனின் கார் துரத்துகின்ற காட்சியிலும் பின்னணி இசையைச் சொல்லி மாளவில்லை. இசையமைப்பாளர் கே பிரமாதப்படுத்தியிருக்கிறார். படத்தில் எங்கே தேவையோ அங்கே மட்டும் இசையை வைத்து நிரப்பியிருக்கிறார். அதிலும் அத்தனையும் சோகம் ததும்பும் இசைக் குறியீடுகள்.. பல இடங்களில் மௌனம்தான்.. மௌனம்தான் எத்தனை எத்தனை கதைகளைச் சொல்கிறது படத்தில்..?

யுத்தத்தில் யார் ஜெயித்தார்கள்..? யார் தோற்றார்கள் என்பது விஷயமில்லை. ஒரு சாமான்யன் இவர்களை எதிர்த்து யுத்தம் செய்தான் என்பதுதான் வருங்காலத்திற்கு தரப்பட்டிருக்கும் செய்தி. அதைத்தான் இத்திரைப்படத்தில் பதிவு செய்திருக்கிறார் மிஷ்கின்.

யுத்தம் செய் - சம்ஹாரம்!

நடிகர்கள் - சேரன், தீபா ஷா, நாசர், லஷ்மி ராமகிருஷ்ணன், நரேன், ஒய்.ஜி.மகேந்திரன், ஜெயப்பிரகாஷ்
இசை - கே
இயக்கம் - மிஷ்கின்
தயாரிப்பு - கல்பாத்தி எஸ். அகோரம்

1 கருத்துரைகள்:

அஹோரி said...

அருமையான விமர்சனம்.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes