Wednesday, February 16, 2011

தூங்காநகரம்



நட்பின் இலக்கணம் என்னவென்று புரியாமல் குழம்பும் டாஸ்மாக் நண்பர்களின் கதை.

மதுரை என்றாலே எப்போதும் தண்ணியடித்துக் கொண்டு, அருவாளை தூக்கிக்கொண்டு அலையும் ரவுடிகள், குடிகாரர்களின் வசிப்பிடம் என்று காட்டிக்கொண்டிருக்கும் சினிமாக்களின் வரிசையில் தூங்கா நகரம்....

மதுரையில் வெவ்வேறு பகுதியில் வேலை பார்க்கும் விமல், பரணி, நிஷாந்த், கௌரவ் நால்வரும் மதுக்கடையில் பழக்கமாகின்றனர். தினம் குடி, கொண்டாட்டம் என திரிகிறார்கள். ஊரில் உள்ள ஒரு பெரிய பணக்கார தாதாவின் இரண்டாவது பையனும், இன்னொரு ஜவுளிக்கடை ஓனரும் சேர்ந்து கொண்டு, டிரஸ்சிங் ரூமில் டபுள் சைஸ் கண்ணாடி வைத்து அவர்கள் டிரஸ் மாத்துவதை போட்டோ எடுத்து அந்த பெண்களுக்கு அனுப்புகிறார்கள். அதை வைத்து அவர்களை ப்ளாக் மெயில் செய்ய, கதை நாயகனான விமலுக்கு தெரிந்த ஒரு அய்யங்கார் ஒருத்தரின் பெண்ணுக்கு அதே போல் பிரச்சினை வர, போதையில் இருக்கும் விமல் அவனை அடித்து துவைத்துவிட, அவனுக்கு கண் போய்விடுகிறது. தான் அடித்தது பெரிய க்ரூப் என்று தெரிந்ததும் நண்பர்கள் நான்கு பேரும் ஆளாளுக்கு எஸ்சாக.. ஒரு கட்டத்தில் வில்லன் க்ரூப் நண்பர்களில் ஒருவனை பிடித்து விமலை அவனின் திருமணத்திற்கு முன்பு கொல்ல வேண்டும் இல்லாவிட்டால் அவன் குடும்பத்தை அழித்துவிடுவோம் என்று மிரட்ட, அவன் தன் உயிர் நண்பனை கொல்லப் போகிறான். அங்கே போனால் மற்ற நண்பர்களும் அதே போல மிரட்டப்பட்டிருக்க, மூவரும் சேர்ந்து விமலை கொல்ல முயற்சிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் நட்பா, நண்பன் உயிரா, என தவிக்கின்றனர். அவர்கள் என்ன முடிவெடுத்தார்கள் என்பது உறைய வைக்கும் இறுதிக்காட்சி.

இந்த கதைக்கு மதுரை தேவையேயில்லை. மதுரை கதை சொன்னால் தான் ஜெயிப்போம் என்ற நம்பிக்கையில் இயக்குநர் இருந்திருப்பாரோ என்னவோ..? அதுவே அவருக்கும் மைனஸாகிவிட்டது. முதல் ஒரு மணி நேரத்திற்கு இவர்கள் அலப்பறை செய்வதாய் நினைத்துக் கொண்டு, பண்ணுகிற இம்சை தாங்க முடியவில்லை. சிங்கம்புலி வரும் பார் காட்சியில் மட்டும் நகைச்சுவை லேசாய் இருக்கிறது.

விமல் 'களவாணி'யில் பார்த்தது போலவே பெரிதாய் ஏதும் முயற்சிக்காமலேயே நடித்திருக்கிறார். இப்படியே போனால் நால்வரில் ஒருவராய் ஆகிவிடும் நாள் தூரத்தில் இல்லை. ஊமையனாக வரும் நிஷாந்துக்கு நல்ல கேரக்டர். நன்றாகவே செய்திருக்கிறார். பரணிக்கும் நல்ல கேரக்டர்தான். குறையொன்றுமில்லை. பிணம் எரியூட்டும் பணியாளராய் வரும் இயக்குநர் கௌரவின் கேரக்டருக்கு ஏன் அவ்வளவு பில்டப் கொடுத்தார்கள். அவன் ஒரு சுயநலவாதி அது இது என்று?. நியாயமாய் பார்த்தால் நிஷாந்தின் மேல் பயணித்த கதையை இவர் மேல் பயணித்திருந்தால் நிச்சயம் க்ளைமாக்ஸை எதிர்பார்த்திருக்க முடியாது.

பார்த்தவுடன் 'இறுக்க அணைச்சு ஒரு உம்மா தரலாமா' எனும் அளவிற்கு கவர்கிறார் அஞ்சலி. ஆனால் பெரிதாய் சொல்லிக் கொள்கிறார் போல ஒன்றுமில்லை. ஓரிரு இடங்களைத்தவிர. விமலுக்கும், அஞ்சலிக்குமான சிறுவயது காதல் கதை படு கண்றாவி. முடியலைடா சாமி. ஆனாலும் அஞ்சலி வரும் போதெல்லாம் ஒரு சுவாசப் புத்துணர்வு வருவதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

வில்லனாக கமலா தியேட்டர் உரிமையாளர் சிதம்பரம் செட்டியார் நடித்திருக்கிறார். அவரது நீண்ட மூக்கும், அவருக்கு வைக்கப்பட்டிருக்கும் காட்சிகளும் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை கொடுத்திருக்கிறது. மற்ற வில்லன் ஆட்கள் எல்லாம் வழக்கமான மதுரை பில்டப் தான்.

ஒரு பாடல் காட்சியில் வேறொருவன் கற்பனையில் அஞ்சலியின் ட்ரெஸ் மாற்றப்பட, அதை அவன் கற்பனையில் அவனை அடித்து, வேறு ட்ரெஸ் மாற்றுவது, பகவான் தான் காப்பாத்தணும் என்று சொன்னதும், பகவான் ஆஸ்பிட்டலில் காட்சி ஓப்பன் ஆவது, கோயில் பட்டாச்சாரியார் சொல்லும் "லோகத்துல 100 கோடி பேர் இருக்கா.. அவாளுக்கெல்லாம் சகாயம் செய்ய கடவுள் வர மாட்டார். மனுஷாதான் வருவார்" என்ற டயலாக்கை சரியான இடத்தில் உபயோகித்திருப்பதும், இரண்டு கிழவிகளை வைத்து காமெடி முயற்சியில் வெற்றிப் பெற்றிருப்பதும், இடைவேளையின் போது சாட்டையடிப் போல சுளீர்ரென்று கிளம்பும் பரபரப்பான திரைக்கதையும் பாராட்டப்பட வேண்டிய விஷயங்களாகும்.

சுந்தர் சி.பாபு இசையில் 'பூவான பார்வைகள் குறும்பான வார்த்தைகள்' எனத்தொடங்கும் பாட்டு செம ஹிட் அடிக்கப்போகும் மெலோடி. ஆனால் அந்தப்பாட்டுக்கான பிக்சரைஷேசனில் இயக்குநர் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். டான்ஸ் மாஸ்டர் கூட சுமாராகத்தான் அந்த பாட்டுக்கு ஒர்க் பண்ணியிருக்கார். அந்த பாடலில் அஞ்சலி மட்டும் அழகு தேவதையாக வர்றார்.

ஒளிப்பதிவு நன்றாகவே இருக்கிறது. முக்கியமாய் ஓப்பனிங் ஜிம்மி ஜிப் மூவ்மெண்ட் காட்சிகளிலும், கன்ஸ்ட்ரக்ஷன் சண்டை காட்சியிலும் மிரட்டலாயிருக்கிறது. ஆனால் முதல் காட்சியில் நிறைய டெக்னிக்கல் தில்லாலங்கடி இருப்பதால் அவ்வளவு பெரிய ட்ராவல் ஷாட்டின் பாராட்டை ஒளிப்பதிவாளருக்கு மட்டும் கொடுக்க முடியவில்லை.

எழுத்து இயக்கம் கௌரவ். இவர் கே.எஸ்.ரவிகுமாரின் உதவியாளர். முதலிலேயே சொன்னது போல இந்த கதைக்கு மதுரை தேவையேயில்லை. மதுரை செண்டிமெண்ட் ஒர்க்கவுட் ஆகியிருக்கும் என்று தோன்றுகிறது. முதல் பாதி முழுவதும் எதையோ ஓட்ட வேண்டுமென்ற கட்டாயத்தில் ஓட்டுவது போல் உள்ளது. காமெடி கொஞ்சம் கூட ஒட்டவில்லை. திரும்ப திரும்ப, டாஸ்மாக், கோயில் திருவிழா என்று ஜல்லியடித்திருக்கிறார்கள். நடு நடுவே அஞ்சலி மட்டும் முகத்தை காட்டவில்லையென்றால் தூங்கியே போயிருக்க வாய்ப்புண்டு.

நடிகர்கள்: விமல், அஞ்சலி, பரணி, நிஷாந்த், கௌரவ், சிதம்பரம் செட்டியார், சிங்கம்புலி
இசை: சுந்தர்.சி.பாபு
இயக்கம்: கௌரவ்
தயாரிப்பு: தயாநிதி அழகிரி

0 கருத்துரைகள்:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes