Tuesday, November 22, 2011

தமிழீழம் எனும் அடைய முடியாத இலக்கு நோக்கிய பயணத்தில் சிக்குண்ட கிழக்கு மாகாணம். பகுதி - 5


தமிழ் மக்கள் தொடர்ந்தும் தமிழ் தலைமைகளினால் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். உணர்ச்சி வார்த்தைகளை மக்கள் தமிழ் மத்தியிலே விதைத்து தமிழ் மக்களின் அவலங்களிலும், கண்ணீரிலும் அரசியல் நடாத்திக் கொண்டிருப்பவர்கள் இனிமேலாவது மக்கள் நலன் நோக்கி சிந்திப்பார்களா? தொடர்ந்தும் தமிழ் மக்களின் அவலங்களில் குளிர்காய நினைக்கின்றனரா?

தமிழ் மக்களின் இன்றைய தேவை என்ன என்பதனை ஒவ்வொருவரும் உணர்ந்து செயற்பட வேண்டும். முப்பது வருடகால யுத்தத்தில் சின்னாபின்னமாக்கப்பட்ட எமது பிரதேசத்தின் அபிவிருத்தி நோக்கியும், தமிழர்களின் உரிமை, சுயநிர்ணயம் தொடர்பில் சாத்தியமான தீர்வுத்திட்டங்கள் நோக்கியும் தமிழ் தலைமைகள் சிந்திக்க வேண்டும். அதை விடுத்து தமது இருப்பினை நிலை நாட்டுவதற்காக வீர வசனம் பேசி மக்களை உசுப்பேற்றி தொடர்ந்தும் தமிழர்களை அழிக்க நினைக்கும் கைங்கரியங்களை உரியவர்கள் நிறுத்த வேண்டும்.

கடந்த அறுபது ஆண்டுகளாக தமிழர்களை உசுப்பேற்றி, உசுப்பேற்றியே தமிழர்களை கொன்றழித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் தமிழர்களின் கண்ணீரிலும், அவலங்களிலும் அரசியல் நடாத்த நினைத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் இன்றைய நிலைப்பாடு என்ன? கொள்கைகள் என்ன? தமிழ் மக்களுக்காக என்ன தீர்வுத் திட்டங்களை முன் வைக்கின்றனர். இவர்களிடம் நிரந்தரமான, உறுதியான கொள்கைகள் இல்லை. இன்று ஒரு கொள்கை நாளை ஒரு கொள்கை. ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் ஒவ்வொரு கொள்ளை? தமிழ் மக்கள் தொடர்பில் எந்த விதமான தீர்வுத் திட்டங்களும் இல்லை. எதிலும் வெளிப்படை இல்லை.

அண்மையில் அனைவராலும் பேசப்பட்ட விடயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் அமேரிக்க, கனடா விஜயம். தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்களும், தமிழீழ ஆதரவாளர்களும், புலம்பெயர் தமிழர்களும் தமிழ் ஊடகங்களும் கூட்டமைப்பினரின் அமேரிக்க, கனடா விஜயத்தினை தமிழீழம் கிடைத்துவிடும் என்பதுபோல் பெரிதாக பிரச்சாரம் செய்தனர். அமேரிக்காவிற்கு எதற்காகச் சென்றனர். யார், யாருடன் பேச்சுவார்த்தை நடாத்தினர், இவர்களின் இந்த விஜயத்தின் மூலம் என்ன தீர்வு கிடைத்திருக்கின்றது? அமேரிக்காவிலும், கனடாவிலும் என்ன நடந்தது?

கூட்டமைப்பினரை அமேரிக்க அரசாங்கமோ, கனடா அரசாங்கமோ தானாக பேச்சு வார்த்தைக்கு அழைக்கவில்லை. கூட்டமைப்பினர் அமேரிக்காவிற்கு செல்வதற்கு கோரிக்கை விடுத்தனர். அதனால் அவர்கள் அழைக்கப்பட்டனர். நாம் ஒருவரின் வீட்டுக்கு செல்வதற்கு அந்த வீட்டுக்காரரிடம் உங்கள் வீட்டுக்கு வரப்போகின்றோம் என்று சொன்னால் வீட்டுக்காரர் வரவேண்டாம் என்று சொல்லமாட்டார். அதுதான் இங்கேயும் நடந்திருக்கின்றது. இவ்வாறுதான் அமேரிக்கா இவர்களை அமைத்தது. இதனை அமேரிக்க இராஜதந்திர வட்டாரங்களே தெரிவித்தன.

அமேரிக்காவில் யார், யாரைச் சந்திக்கப்போகிறோம் எந்தெந்த விடயங்களைப்பற்றி பேசப்போகின்றோம் என்ற ஒரு திட்டங்கள்கூட அவர்களிடம் இருக்கவில்லை. அமேரிக்காவிற்குச் சென்ற கூட்டமைப்பினர் யார், யாருடன் பேசினர். எதைப்பற்றிப் பேசினர் என்ன தீர்வுகள் எட்டப்பட்டன போன்ற விடயங்களை இதுவரை மக்களிடம் தெரியப்படுத்தாமை ஏன்? கனடாவிற்குச் சென்றவர்கள் கனடாவில் என்ன செய்தனர் யார், யாரைச் சந்தித்தனர்? அவர்களின் இரு நாட்டு விஜயத்தின் மூலம் எட்டப்பட்ட தீர்வுதான் என்ன?

கூட்டமைப்பினரின் இவ்விஜயம் தமிழர்களின் உரிமைக்காக இரு நாட்டு தலைமைகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்தும் நோக்கத்துடன் அமைந்த ஒன்றல்ல. அமேரிக்கா, கனடா போன்ற நாடுகளிலே புலம்பெயர் தமிழர்கள் அதிகம் வாழ்கின்றனர். இவர்கள் தமிழீழ ஆதரவாளர்கள் மட்டுமல்லாது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளர்களும்கூட. புலம்பெயர் தமிழர்கள் யுத்தத்தால் அழிவடைந்த தமிழர் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்காக கூட்டமைப்பினருக்கு பாரிய தொகைப்பணங்களை வழங்கி வருகின்றனர். அத்துடன் கூட்டமைப்பினரின் சொந்தங்கள், உறவினர்கள் இவ்வாறான நாடுகளிலே இருக்கின்றனர்.

இரு நாடுகளிலும் இருக்கின்ற தமது ஆதரவாளர்களை சந்தித்து தமது இருப்பினை நிலை நிறுத்திக் கொள்ளவும். பெருந்தொகைப் பணங்களை சுருட்டிக் கொள்ளவும், தமது குடும்ப உறவுகளுடன் உறவாடவும், மீண்டும் தமிழர்களை ஏமாறும் சமூகமாகவும் நிலை நிறுத்தவுமே இவர்களின் விஜயம் அமைந்திருந்தது.

அமேரிக்கா, கனடா போன்ற நாடுகள் தம்மை அமைத்து பேச்சுவார்த்தை நடாத்துவது போன்ற மாயையை ஏற்படுத்தி மக்களை தங்கள் பக்கம் திசை திருப்பும் ஒரு முயற்சியாகவே அமைந்திருந்தது இந்த விஜயம். இவ்விஜயத்தை பெரிது படுத்தி ஊடகங்கள் கருத்துக்களை வெளியிட்டதனால் இவ்விஜயத்தின் மூலம் தமிழர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று பலர் நினைத்தனர். தமிழீழம் கிடைத்து விடும் என்று நினைத்தவர்களும் உண்டு. அந்தளவிற்கு இவர்களின் அமேரிக்க, கனடா விடயம் மிகைப்படுத்தப்பட்டிருந்தன. அன்று பக்கம் பக்கமாக எழுதிய, செய்திகளை வெளியிட்ட தமிழ் ஊடகங்கள். இவர்களின் விஜயத்தின் மூலம் எட்டப்பட்ட விடயங்களை வெளியிடாமல் இருப்பது தொடர்பாக கேள்விகளை கேட்காமல் இருப்பது ஏன்? இவ் ஊடகங்களும் கூட்டமைப்பினருடன் சேர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றி மீண்டும் அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்ல நினைக்கின்றனரா?

தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சினைகள் இல்லை என்றால் கூட்டமைப்பினரால் அரசியல் நடாத்த முடியாது. அதே போன்று தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சினை இருந்தால்தான் ஊடகங்களால் பிழைப்பு நடாத்த முடியும். உணர்ச்சி வார்த்தைகளை முன் வைக்கின்றபோது தமிழன் எதனையும், நம்பும் அளவிற்கு மட்டுமல்ல எதனையும் செய்யும் அளவிற்கு தமிழன் பழக்கப்பட்டுவிட்டான்.தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும், தமிழ் ஊடகங்களும் இதனை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். கூட்டமைப்பினரும், தமிழ் ஊடகங்களும் தமிழன், தமிழர் உரிமை, தமிழீழம், தமிழிPழம் என்று பேசிப்பேசியே தமிழர்களை உசுப்பேற்றி, உணர்ச்சிவசப்படுத்தி தமிழர்களை குழப்பமடையச் செய்து தமது இருப்பை நிலை நிறுத்திக் கொள்கின்றனர்.

இவர்களின் இவ் விஜயத்தின்போது கனடாவில் என்ன நடந்தது. நட்சத்திர ஹோட்டலில் பாரிய விருந்துபசாரம் இடம்பெற்றது. இதற்கு புலம்பெயர் தமிழர்கள் பலர் எதிர்ப்புக்களை தெரிவித்திருந்தனர். இவ் விருந்துபசாரத்துக்கு பாரிய தொகைப்பணம் விரயமாக்கப்பட்டிருந்தது. இன்று யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது தமிழ் பிரதேசங்களிலே ஒரு வேளை உணவு இல்லாமல் எத்தனையோ பேர் தவிக்கின்றனர். அங்கே செலவு செய்த பெருந்தொகைப் பணத்தை உணவின்றி வாடும் எமது மக்களின் பசியைப் போக்கியிருக்கலாமல்லவா? இவ்வாறான விருந்துபசாரங்கள் தேவையா? விருந்துபசாரத்துக்காகவும், நட்சத்திர விடுதிகளில் கும்மாளம் அடிக்கவுமா கனடாவிற்குச் சென்றனர். கனடாவிற்குச் சென்ற கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு சினிமா நட்சத்திரங்கள் வரவேற்கப்படுவதுபோல் வரவேற்கப்பட்டனர். இவர்கள் சினிமா நட்சத்திரங்களா? மக்கள் பிரதிநிதிகளா? இவர்கள் அரசியலுக்கு வராமல் சினிமாவிற்கு வந்திருக்கலாம். இவர்களை சினிமா நட்சத்திரங்களை வரவேற்பதுபோல் வரவேற்கப்பட்டமையினை புலம்பெயர் தமிழர்கள் பலர் விமர்சித்திருந்தனர்.

இந்த வெளிநாட்டு விஜயம் ஒருபுறமிருக்க விஜயத்தை நிறைவு செய்து இலங்கை வந்த கூட்டமைப்பினரின் நிலைப்பாடு என்ன? அவர்களின் நிலைப்பாட்டையாவது மக்களுக்கு தெளிவு படுத்துவார்களா? உண்மையிலேயே கூட்டமைப்பினர் கொள்கை இல்லாக் கூத்தாடிகள் போன்றுதான் செயற்படுகின்றனர். ஒரு புறத்திலே அரசாங்கத்துக்கு எதிராக உண்ணாவிரதம் போன்ற எதிர் நடவடிக்கைகளிலே ஈடுபட்டு வருகின்றனர். மறு புறத்திலே அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்திக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே அரசுடன் இடம் பெற்ற பேச்சுவார்த்தைகளில் பேசப்பட்ட விடயங்கள், எட்டப்பட்ட விடயங்கள் தொடர்பாக மக்களுக்கு இன்னும் தெளிவு படுத்தப்படவில்லை. மீண்டும் அரசுடன் பேச்சுவார்த்தைகளில் கூட்டமைப்பினர் ஈடுபடுகின்றனர். கூட்டமைப்பினர் அரசாங்கத்துடன் இரகசிய ஒப்பந்தங்களை செய்கின்றார்களா?

இன்று இலங்கையின் பாராளுமன்றத்திலே ஜனாதிபதியினால் 2012 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் நடவடிக்கைகளை நன்கு அவதானித்திருந்தால் சில விடயங்களை உணர்ந்திருக்க முடியும். வழமையாக வரவு, செலவுத்திட்டத்தை எதிர்ப்பவர்கள், அல்லது பகிஸ்கரிப்பவர்கள் இன்றைய வரவு செலவுத்திட்டத்தில் அமைதியாக இருந்தனர். அதற்காக ஜனாதிபதி நன்றிகளையும் தெரிவித்தார். அத்துடன் நிதி அமைச்சரினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேனீர் உபசாரத்திலும் கலந்து கொண்டனர்.

தொடரும்...

Monday, November 14, 2011

தமிழீழம் எனும் அடைய முடியாத இலக்கு நோக்கிய பயணத்தில் சிக்குண்ட கிழக்கு மாகாணம். பகுதி - 4


அன்றுதொட்டு இன்றுவரை கிழக்கு மக்கள் தமிழ் தலைமைகளினால் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வந்த சரித்திரங்கள் இருக்கின்றன. இவ்வாறு கிழக்கு மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருவதற்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல அரசியல்வாதிகள் பக்க பலமாக இருந்து வருகின்றனர். அந்தக் காரியத்தைத்தான் இன்று கிழக்கிலே இருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களுக்கு வால் பிடிப்பவர்களும் செய்துகொண்டிருக்கின்றனர்.

இன்று மட்டக்களப்பிலே இருந்து தெரிவான மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் கிழக்கு மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருவதற்கு உறுதுணையாக இருப்பது கவலைப்படவேண்டிய விடயம். கிழக்கு மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றனர் என்பதனையும் தமது தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தொடர்ந்தும் தம்மையும், கிழக்கு மக்களையும் ஏமாற்றி வருகின்றது என்பதனை இந்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் அறியாமலோ அல்லது உணராமலும்இல்லை. ஆனாலும் தாம் அரசியல் இலாபம் தேடவும், சொத்துச் சேர்க்கவும் பொம்மைகள் போன்று சம்பந்தனோ அல்லது அவரைச் சார்ந்தவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையசைத்துக் கொண்டிருக்கின்றனர்.

உண்மை நிலைமைகளைச் சொன்னால் வெளிநாடுகளிலே இருக்கின்ற புலம்பெயர் தமிழர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கொடுக்கின்ற பல மில்லியன் கணக்கான பணங்களை தாம் இழந்துவிடுவோம். தாம் அரசியல் நடாத்த மூடியாது அரசியலில் இருந்து ஓரங்கட்டப்படுவார்கள் என்பதனை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் நன்கு அறிந்து வைத்துள்ளனர். இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப்பீடம் தமிழ் மக்களை எவ்வாறெல்லாம் குழப்பமடையச் செய்து மீண்டும் மக்களை உசுப்பேற்றி யுத்தத்தை நோக்கி திசைதிருப்பி தமிழர்களின் பிரச்சினையில் குளிர்காய நினைக்கின்றதோ அவற்றுக்கெல்லாம்பக்கப்பாட்டுப் பாடிக்கொண்டிருக்கின்றனர் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும்.

யுத்தத்தின் பின்னர் கிழக்கு மாகாணசபை உருவாக்கத்தின் பின்னர் கிழக்கு மாகாணம் துரிதமாக வளர்ச்சி அடைந்து வருகின்றது. இந்த அபிவிருத்திகளை சம்பந்தன் போன்றவர்கள் இல்லாமல் செய்யவேண்டும் என்பதில் அக்கறையாக இருக்கின்றனர். கிழக்கின் அபிவிருத்தி என்பது அவர்களுக்கு பிடிக்காத விடயம். கிழக்கு மாகாண முதலமைச்சர் எதைச் செய்தாலும் பிழை பிடித்துக் கொண்டிருக்கின்ற மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கும் எந்த அருகதையும் இல்லை. கிழக்கு மாகாண முதலமைச்சர் பல அபிவிருத்தித் திட்டங்களை துரிதமாக முன்னெடுத்து கிழக்கு மாகாணத்தை அபிவிருத்திப்பாதை நோக்கி கொண்டு செல்கின்றார்.

இந்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்று மக்களுக்காக எதனைச் செய்திருக்கின்றனர். மக்களைக் குழப்பமடையச் செய்ததைத் தவிர? பிரதேச அபிவிருத்திக்காக பாராளுமன்ற உறு;பினர்களுக்கு ஐம்பது இலட்சம் ரூபாய் ஒதுக்கப்படுகின்றது. இந்த ஐம்பது இலட்சம் ரூபாவை இந்த மூவரும் என்ன செய்தனர்? ஏதாவது அபிவிருத்தி செய்திருக்கின்றனரா? யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்காக புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலே இருக்கின்ற தமிழர்களும், தமிழர் அமைப்புக்களும் இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பெருந்தொகைப் பணத்தினை கொடுக்கின்றனர். அத்தனை கோடிக்கணக்கான பணத்தினையும் தமது குடும்பத்தின் அபிவிருத்திக்காக கொள்ளையடிக்கின்றனர். கடந்த வருடம் கிழக்கிலே ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்திலே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக வெளிநாட்டிலிருப்பவர்களினால் பாரிய தொகைப்பணம் ஒரு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரிடம் வழங்கப்பட்டிருந்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்காவது இதுவரை வழங்கப்படவில்லை.

மட்டக்களப்பிலே இருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களுக்காக என்ன செய்துகொண்டிருக்கின்றனர்? ஒருவர் அறிக்கை மன்னனாக எதற்கெடுத்தாலும் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றார். இவர் அறிக்கை விட்டு இதுவரை எதனைச் சாதித்திருக்கின்றார்? அறிக்கை விடுவதற்காகவா அரசியலுக்கு வந்தார்? கிழக்கு மக்களின் பிரச்சினைகளைப்பற்றி இவருக்குத் தெரியுமா? இவர் அறிக்கை விடுவதற்கும் கிழக்கு மாகாண முதலமைச்சரை பிழை பிடிப்பதற்கும் எந்த விதத்திலும் அருகதையற்றவரே. இவர் எவ்வாறு அரசியலுக்கு வந்தவர் என்பதனை அவர் மறந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் மக்கள் மறந்திருக்கலாம். இவர் எப்படி அரசியலுக்கு வந்தார். இவரின் கடந்தகாலப் பக்கங்களைப் புரட்டப்போனால் பக்கம், பக்கமாக எழுதிக்கொண்டே போகலாம். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உயிரைப் பறித்துவிட்டு அரசியலுக்கு வந்தவர்தன் இந்த அறிக்கை மன்னன் என்பதைமட்டும் குறிப்பிட விரும்புகின்றேன்.

இன்னொரு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவில், கோவிலாக பூசை முடித்துத் திரிகின்றார். இவரின் பதவி பாராளுமன்ற உறுப்பினரா? அல்லது பூசாரியா? தான் எந்தக் கோவிலுக்குப் போணாலும் அந்தக் கோவிலில் தான் பூசை செய்கின்றார். மக்கள் இவரை பாராளுமன்றம் அனுப்பியது கோவில்களில் பூசை செய்யவா? அல்லது மக்களுக்காகச் சேவை செய்யவா? இவர் இந்துக்களிடையே குழப்பங்களையும் ஏற்படுத்தி வருகின்றார். இவருக்கு தன் கட்சியின் கொள்கையோ தன் கொள்கையோ இதுவரை தெரியாது. இவருக்கு கட்சியில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் இருக்கும் அப்படிப்பட்டவர்தான் இந்த ஆசாமி.

மற்றுமொருவர் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர் என்பதனைவிட கிழக்கு மக்களைத் தின்ன வந்தவர் என்று சொல்லலாம். கிழக்கு மக்களை தமக்குக்கீழ் வைத்துக்கொண்டு கிழக்கு மக்களை பல்வேறு வழிகளிலும் ஏமாற்ற நினைத்த வடக்குத் தலைமைகளின் சூழ்ச்சிகளுக்கெல்லாம் பக்க பலமாக நின்று கிழக்கு மாகாணத்துக்கும், கிழக்கு மக்களுக்கும் துரோகம் செய்தவர். இன்றும் அதனைத்தான் செய்து வருகின்றார்.

கிழக்கு மக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மக்களை ஏமாற்றவில்லை என்று இந்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது மனதைத்திறந்து மனசாட்சிக்கு விரோதமில்லாமல் சொல்லட்டும் பார்க்கலாம். சொல்லமாட்டார்கள் இது ஒருபுறமிருக்க இந்து சமயத்தை வழிநடத்தவதாகச் சொல்லும் ஆசாமியே வாய் நிறையப் பொய்களைக் கட்டிக் கொண்டு மக்களையும், இந்து சமயத்தையும் குழப்பமடையச் செய்வதுதான் வேடிக்கை.

தொடரும்...

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes