Saturday, July 31, 2010

தமிழ் தேசியக்கூட்டமைப்பும் அதிகரித்துவரும் குற்றச்சாட்டுகளும்

கடந்தவாரம் வீரகேசரி நாளிதழில் அரசியல் கட்டுரை ஒன்று வாசிக்கக்கிடைத்தது. சகல தமிழ் அரசியல் தலைவர்களினுடைய, தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பான தற்போதைய நிலைப்பாட்டினையும் குறிப்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நிலையினையும் அக்கட்டுரை அலசியுள்ளது. அக்கட்டுரையினை ஆரம்பிக்கும்போது அவ்வெழுத்தாளர் "இது தவறான கருத்தல்ல, அவர்களை வழிப்படுத்துவதே நோக்கம்" (சுருக்கமாக) என குறிப்பிட்டுள்ளார். அவர் இவ்வாறு கூறியமைக்கு காரணமும் இருக்கத்தான் செய்கிறது. தமிழ் தேசியக்கூட்டமைப்பினரின் தவறான நடத்தைகளை இனம்கண்டாலும் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அநேகமான தமிழர்களுக்கு இல்லை என்பதே உண்மை. அந்த காரணத்தினால்தான் அவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார். உண்மையிலேயே அவர் கூறியிருந்தது போல அகதிகள் விடயத்திலும் அவர்களது இழந்த சொத்துக்கள் விடயத்திலும் எந்தவொரு விபரமும் தெளிவும் கூட்டமைப்பினரிடம் இல்லை என்பதே உண்மை. அந்த விபரங்களை திரட்டுவதில் கூட அவர்கள் மும்முரமாக ஈடுபடவில்லை என்பது வேதனைக்குரிய விடயம். இது மிகவும் அவசியமானதொன்று. ஏனைய தமிழ் அரசியல் தலைவர்கள் எடுத்துக்கொண்டிருக்கும் முயற்சிகளில் ஒரு சிறுபகுதியளவு முயற்சியை கூட தமிழ்தேசியக்கூட்டமைப்பு எடுக்கவில்லை என்பதை சமகால அரசியல் அறிக்கைகளை வைத்து தெரிந்துகொள்ளலாம். எங்கோ ஒரு மூலையில் பார்த்த, கேட்ட செய்திகளை வைத்துக்கொண்டு வெறும் அறிக்கைகள் மட்டும் அவ்வப்போது வெளியிட்டுக்கொண்டிருக்கின்றார்கள். அதேபோன்று அரசியல் தீர்வு விடயத்திலும் உறுதியான நிலையின்றி திக்கி திணறிக்கொண்டிருக்கின்றார்கள் என்றே சொல்லாம். வடக்கு, கிழக்கு இணைப்பு மிக முக்கியமானதென்றும் அதனூடாகத்தான் தீர்வை எட்டமுடியும் என்றும் கருத்துக்களை அள்ளிவீசிக்கொண்டிருந்தவர்கள், இப்பொழுது வடமாகாணசபைத்தேர்தலிலும் அடுத்து கிழக்கு மாகாண சபைத்தேர்தலிலும் போட்டியிட முனைப்பு கொண்டிருப்பதை அவதானிக்கமுடிகின்றது. அப்படியானால் இவர்கள் ஆரம்பத்தில் கூறிய வடக்கு, கிழக்கு இணைப்பு கதை என்னவானது? இவர்களது நோக்கம்தான் என்னவாக இருக்கின்றது. இந்த விடயம் சிலருக்கு புரியாத புதிராக இருக்கலாம், சிலருக்கு இராஜதந்திர நகர்வாக தென்படலாம். ஆனால் இதில் எதுவுமில்லை. அரசியலில் தொடர்ந்து நிலைகொண்டிருக்க எவ்வழி உதவுமோ அவ்வழியே சிறந்தவழி என்ற போக்கு என்று சொல்வதுதான் பொருந்தும். இடம்யெர்ந்து அவல வாழ்க்கை வாழும் மக்கள் சார்பாகவும் தீர்வை எதிர்பார்த்து காத்திருக்கும் சகல ஈழத்தமிழர்கள் சார்பாகவும் கோரிக்கை ஒன்றை தமிழ் தேசியக்கூட்டமைப்பினருக்கு வேண்டுமென்றால் முன்வைக்கலாம். "நீங்கள் எப்படிப்பட்ட அரசியல் வேண்டுமென்றாலும் செய்யுங்கள், உங்களை நம்பி அனுப்பிய மக்களின் துயர் துடைக்க உருப்படியான வேலைத்திட்டங்களை குறைந்தபட்சமாவது முன்னெடுங்கள்"

0 கருத்துரைகள்:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes