Sunday, July 25, 2010

தமிழ்ச்செம்மொழி மாநாடும் அரசியல் ஆடுகளமும்

இந்திய மத்திய அரசினால் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தமிழ்மொழியை கெளரவிக்கும் முகமாக தமிழ்நாட்டிலே முதல்வர் கருணாநிதி தலைமையிலே தமிழ்ச்செம்மொழி மாநாடு மிகவும் சிறப்பாக நடந்துமுடிந்திருந்தது.

அதன் பிற்பாடு அச்செம்மொழி மாநாடு பல அரசியல் தந்திரங்களை மையமாக கொண்டு நடந்ததாக குற்றச்சாட்டுக்கள் தோன்ற ஆரம்பித்தன. அதேபோலவே இலங்கையில் கிழக்குமாகாணத்தில் கிழக்குமாகாணசபை கல்வித்திணைக்களத்தின் ஏற்பாட்டில் சுவாமி விபுலானந்தரின் சிரார்த்த தினத்தில் காரைதீவிலே தமிழ்ச்செம்மொழி மாநாடு சிறப்பாக நடந்து முடிந்திருந்தது. 

சுவாமி விபுலானந்தர் கல்விக்கும் தமிழுக்கும் ஆற்றிய சேவையினை மெச்சும் முகமாகவே அவரது சிரார்த்த தினத்தில் இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுவும் இப்பொழுது அரசியல் பிரச்சினைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்துகொண்ட கிழக்குமாகாண முதலமைச்சர் தகுதியற்றவர் என்றும் ஒரு குற்றச்சாடடை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பியசேன அவர்களால் முன்வைக்கப்பட்டிருந்தது. அக்குற்றசாட்டுக்கு பதிலளித்திருந்த முதலமைச்சரின் ஊடகப்பிரிவு இது ஒரு அரசியல் சாரா நிகழ்வென்றும் புத்திஜீவிகளுக்கும் , கல்விமான்களுக்கும் , தமிழ் ஆர்வலர்களுக்குமே முக்கியத்துவம் வழங்கப்பட்டதாகவும் கிழக்கு மாகாணத்தின் நிருவாகத்திற்கு பொறுப்பாகவுள்ள முதலமைச்சர் அவர்களின் பிரசன்னமானது மிகவும் அவசியமானதொன்றென்றும் மறுப்பறிக்கை வெளியிட்டுள்ளனர்.


எது எப்படியிருப்பினும் தமிழ்நாட்டிலே தமிழ்ச்செம்மொழி மாநாடு நடந்து முடிந்த கையோடு இலங்கையில் நடந்ததையிட்டு நாம் பெருமையடையவேண்டும். யார் பெரியவர் என்ற அரசியல் போட்டிகளை விட்டு தமிழுக்காகவே வாழ்கிறோம் உரிமைக்காகவே குரல் கொடுக்கிறோம் என்ற கோஷங்களோடு மட்டும் நின்றுவிடாமல் தாய்மொழியை பாதுகாத்து வளர்க்கவேண்டிய கடப்பாடு நமக்கு இருக்கின்றது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அதற்கு இதுபோன்ற மாநாடுகளும் , விழாக்களும் இன்றியமையாதது. நாம் செய்யாவிட்டாலும் செய்பவர்களை ஊக்குவிப்பதே சிறப்பானதொரு அரசியலாக இருக்கும். ஆகவே இதனை அரசியல் ஆடுகளமாக்குவது பொருத்தமற்றதாகவே அமையும்.

2 கருத்துரைகள்:

Anonymous said...

இது கிழக்கு மண் போல் இருக்கிறது

Jana Master said...

// A.சிவசங்கர் said...

இது கிழக்கு மண் போல் இருக்கிறது//

உண்மையை சொல்லப்போனால் இதுதான் பிரச்சினை. பக்கச்சார்பாக்கிவிடுவீர்களே..
மண்வாசனை உங்களுக்கு தெரிகிறது போலும்..

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes