Friday, April 15, 2011

யார் இந்த அம்பேத்கர்? ஏப்ரல் 14 – ஏன் விடுமுறை?

காரணம் நிறைய பேருக்கு தெரிவதில்லை. கடந்த ஆண்டுகள் வரை தமிழ் வருடப்பிறப்பு என்பதால் தான் ஏப்ரல் 14 அன்று விடுமுறை என்றே பலர் நினைத்திருந்தனர். ஆனால் தமிழ் வருடப்பிறப்பின் நாளாக தை 1ம் தேதியாக மாற்றப்பட்டப்பின் இனியாவது, டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஐ தான் விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது என்ற விடயம் தெரியும் என்று பார்த்தால் அதுவும் பலருக்கு தெரிவதில்லை. அப்படி அவரை நினைவு வைத்துக்கொள்ள அவரைப்பற்றி பேச அவர் என்ன மகாத்மாவா?

யார் இந்த அம்பேத்கர்?
உலகிலேயே பயங்கரமான
உயிர்கொல்லி நோய் எயிட்ஸாம்!
அதில் இந்தியாவுக்கு முதலிடமாம்!
அதை விட கொடிய நோய் ஒன்றுண்டு
பல நேரங்களில் மனித ஓநாய்கள்
மனித இரத்தத்தை குடிக்கும் நோய்
சாதி எனும் கொடிய நோய்!
தன் இரத்தம் சிந்தி மனிதனை கழுவிய
கிறித்தவத்திலும் சாதி!
இனி எந்த கர்த்தரும் இரத்தம் சிந்தப்போவதில்லை எங்கள்
வன்னிய கிறித்தவனுக்கும், நாடார் கிறித்தவனுக்கும், தேவர் கிறித்தவனுக்கும்
ஒட்டியுள்ள சாதியை கழுவி விட…
இரத்தம்.. இரத்தம்..
ஆரம்பத்திலிருந்தே இதென்ன அமங்கலம் என்கிறாயா?
அமங்கலத்தையே அன்னாடம் வாழ்க்கையாய்
சுடுகாட்டில் பிணம் எரிந்தால்தான் வீட்டில்
சோறுக்கு விறகெரியும்
பிணம் எரிக்கும் பறைய‘ன்’ தெரியுமா உனக்கு?
பிணம் எரிப்பதா?? ச்சீ.. இதென்ன கவுச்சி என்கிறாயா?
கவுச்சி வாடையையே ஆடையாய்
ஆண்டாண்டு காலமாய் அணிந்திருக்கும்
மலம் அள்ளும் சக்கிலிய‘ன்’ தெரியுமா உனக்கு?
மலமா…. Dirty words … என்கிறாயா?
உடம்பு நாத்தம் தெரியாகூடாதுன்னு செண்ட் அடிச்சு சுத்துறோம்
நாளுநாள் நாத்தம் புடிச்ச துணிய வெளுப்பதே
வேலையாய் செய்யும் வண்ணா‘னை’ தெரியுமா உனக்கு?
அது அவங்க வேளைங்கிறியா?
கூலிய உசத்தி கேட்டாக்க நாக்குமேல
பல்லு போட்டு சக மனுசன பள்ள‘ன்’ னு பேசுறது தெரியுமா உனக்கு?
பிறப்பால் இவன் பள்ளன், பறையன், சக்கிலியன், வண்ணான் என்ற பாகுபாடு!
இந்த அ‘ன்’ னெல்லாம் வகுத்துக்கொடுத்த மனுவையும்,
சதுர்வர்ணத்தை படைத்த எல்லா வல்ல அவனையும்
அம்மணமாக்கி வேதங்களை அம்பலப்படுத்தி
கரும்புள்ளி செம்புள்ளி குத்தாக் குறையாக
பிறப்பால் அனைவரும் சமமென்றும்
அனைவரும் மனிதர்களென்றும்
தன் கருத்துக்களால் நெற்றியில் பிறந்தவர்களுக்கு(?)
மண்டையிலேயே சூடு போட்டு அனுப்பியவர்!
இந்து மதத்தை கேள்விகளால் இடித்துரைத்து
அதன் வேளிகளை வெட்டியெறிந்தவர்!
விலங்குகளாய் விலங்கிடப்பட்டிருந்த கோடானுகோடி
மக்களின் விடுதலைக்காக அரும்பாடுப்பட்டவர்!
அவர் தான் டாக்டர் அம்பேத்கர்..

1 கருத்துரைகள்:

கோவை செய்திகள் said...

சிறப்பான பதிவு. நன்றி தோழரே.... தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்!

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes