Sunday, August 22, 2010

இதெல்லாம் ஒரு ஊடகம்.

ஊடகங்கள் பக்கச் சார்பின்றி செயற்பட வேண்டும் ஆனால் சில ஊடகங்கள் தாங்கள் சுய இலாபம் தேடுவதற்காக சமூகங்களுக்கிடையே பிரிவினையினை ஏற்படுத்தி வருவதோடு தமது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்ள எதனையும் செய்யத் துணியும் சில அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாத அரசியலுக்கு துணைபோகும் பல ஊடகங்கள் இருக்கின்றன.

அண்மையிலே மட்டக்களப்பு ஆரையம்பதியிலே இடம்பெற்ற ஒரு நிகழ்விலே கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் ஆற்றிய உரையினை முற்றிலும் திரிவு படுத்தி தமிழ்வின் இணையத்தளம் செய்தியினை வெளியிட்டிருந்தது.

நான் ஒரு முதலமைச்சராக இன்றி பழைய பிள்ளையானாக மாற வேண்டி வரும்: எச்சரிக்கிறார் கிழக்கு மாகாண முதலமைச்சர் எனும் தலைப்பிலே எழுதப்பட்டிருக்கும் அச் செய்தியில். 18.08.2010ம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி மட்டக்களப்பு ஆரையம்பதியிலுள்ள ஆரையம்பதி சமூக அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் முதலமைச்சரை வரவேற்று வாழ்த்துவதற்காக ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. என்றும் அங்கே மகஜர் ஒன்று முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டதாகவும். முதலமைச்சர் பேசும்போது “முஸ்லிம் மக்களுக்கான மாதிரிக் கிராமம் அமைக்கப்படுவதை யாராலும்
தடுக்க முடியாது. இதையும் மீறி தடுக்கும் முயற்சியில் யாராவது தமிழர்கள் ஈடுபட்டால் அதை எதிர்கொள்வதற்கு நான் ஒரு முதலமைச்சராக இன்றி பழைய பிள்ளையானாக மாற வேண்டி வரும்” என உரத்த குரலில் எச்சரிக்கை விடுத்தார். என்றும் குறிப்பிடப் பட்டிருக்கின்றது.

இது முற்றிலும் தவறான ஒரு செய்தியாகும் இந்த நிகழ்வுகளிலே நானும் கலந்து கொண்டேன்.

உண்மையில் நடந்தவை என்ன...


18.08.2010ம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி பிறந்தநாள் நிகழ்வும் முதலமைச்சரின் இரண்டு வருட அபிவிருத்திப் பணிகளின் தொகுப்பு இறுவட்டு வெளியீடும் மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்திலே இடம்பெற்றது.

பிறந்தநாள் நிகழ்வு ஆரையம்பதியில் இடம்பெறவில்லை. மட்டக்களப்பு ஆரையம்பதியிலுள்ள ஆரையம்பதி சமூக அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில்
எந்த ஒரு நிகழ்வும் ஆரையம்பதியில் இடம்பெறவில்லை.



ஆரையம்பதியிலே முதலமைச்சரின் பிறந்த தினத்தன்று நெக்டெப் திட்டத்தின் மூலம் இரண்டு கோடி செலவில் இளைஞர் வள நிலையம் முதலமைச்சரினால்
திறந்து வைக்கப்பட்டது. இங்கே பிறந்தநாள் நிகழ்வு இடம்பெறவில்லை. இத்திறப்பு விழாவினை ஆரையம்பதி பிரதேச செயலகத்தினர் ஏற்பாடு செய்திருந்ததோடு பிரதேச செயலாளர் தனபாலசுந்தரம் அவர்களின் தலைமையிலேதான் நிகழ்வு இடம்பெற்றது.


அந்த நிகழ்வில் முதலமைச்சர் உரையாற்றும்போது. காங்கேயனோடையில் அமைக்கப்பட இருக்கின்ற மாதிரிக் கிராமம் தொடர்பாக தான் இப்போது
ஒரு முடிவெடுக்க முடியாது எனவும் தான் ஒரு முதலமைச்சராக இருந்து பக்கச் சார்பான முறையிலே முடிவெடுக்க முடியாது. இரு இனத்தவரினுடைய உரிமை கௌரவம் என்பவற்றுக்கு மதிப்பளித்து தான் செயற்பட வேண்டும் என்றும் இந்த மாதிரிக் கிராமம் அமைக்கப்படும் பிரதேசம் தங்களுடையது என்று தமிழர்களும்
முஸ்லிம்களும் உரிமை கோரி வரும் நிலையில் இதன் உண்மை நிலையினை அறிய தான் ஒரு குழுவினை அமைத்து ஆராய்ந்து வருவதாகவும் கூறினார்.

மேலும் இப்பிரச்சினையை ஒரு சில அரசியல்வாதிகள் இரு சமுகங்களுக்கிடையே விரிசலை ஏற்படுத்தி தமது இருப்பினை தக்க வைத்து
அரசியல் ஆதாயம் தேட முற்படுகின்றனர். அதேபோல் சில அதிகாரிகளும் தமது ஊழலை மூடி மறைப்பதற்காக இரு சமூகங்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்க நினைக்கின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

ஊடகங்கள் சமூகங்களுக்கிடையே பிரச்சினைகளை ஏற்படுத்தும் பொய்யான செய்திகளை தவிர்க்க வேண்டும். இவ்வாறான பல பொய்யான பிரச்சாரங்கள் மூலம் எமது தமிழ் சமூகம் பல அவலங்களை சந்தித்திருக்கின்றது. இது போன்ற பொய்யாய செய்திகள் மூலம் இரு சமூகங்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்க நினைப்பதை ஊடகங்களும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நன்றி - சந்ரு

0 கருத்துரைகள்:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes